காவிரி ஆறு (Cauvery river) அல்லது காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் சம மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் நதிகளின் பெயர்கள் பெண்பால் பெயர்களாக இருக்கின்றன. அவை காரணப் பெயர்களும் கூட. காவிரிக்கு 'பொன்னி' என்று பெயர் வந்ததற்கு அதன் நீரில் அடங்கியிருந்த தாதுக்களில் தங்கத் தாது சற்று அதிக அளவில்இருந்திருக்கிறது.
பயன்பாடு:
காவிரி நீரானது பாசனத்திற்காகவும், மக்களின் அன்றாடத்தேவைகளுக்காகவும் நீர் மின்உற்பத்திக்காகவும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.
காவிரியின் குறுக்கே பல அணைகளும் குடிநீர் நீரேற்று நிலையங்களும் தடுப்பணைகளும் நீர்மின்நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றின் சிவனசமுத்திர அருவியின் இடது பக்கம் 1902-இல் அமைக்கப்பட்ட நீர்மின்நிலையமே ஆசியாவின் முதல் நீர்மின்நிலையம் ஆகும்.